Friday, March 27, 2009

ஒரு கையாலாகதவனின் கனவு....

யாரோ எப்போதோ போட்ட மாலை
வெறும் நாராய் காற்றிலாட
கையில் வாளேந்தி
கட்டபொம்மன்
ஆவேசமாய் நிற்கிறார்.


கண்களின் உருட்டல்
பார்ப்போரை பயமுறுத்துகிறது.


இருட்டியபின்
கட்டபொம்மன் காலடியில்
கஞ்சா விற்கிறார்கள்.



பரத்தை ஒருத்தி
பள்ளிக்கூடப் பய்யனிடம்
பேரம் பேசிக்கொண்டிருக்கிறாள்.


போக்குவரத்துக்காவலர்
மாதக்கடைசி என்றுசொல்லி
மானியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆணும்மில்லாத பெண்ணுமில்லாத

"இடையினங்கள்"

புதிய தொழில்நுட்பத்தை
கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.



இங்குதான்
போனமாதம்
ஒரு கட்சிக்காரனை
இன்னொரு கட்சிக்காரன்
வெட்டிக் கொன்றான்.



கட்டபொம்மனோ
வழக்கம்போல
வெட்டப்போவதுபோல
வீராப்பாக நிற்கிறார்.
வெட்டுவதாக தெரியவில்லை.



02/08/1994 இல் எழுதியது!

1 comment:

Unknown said...

நெம்ப அருமையா இருக்குதுங்கோ தம்பி கவிதை.....!!!



" வாழ்க வளமுடன்....!!! "